நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் காற்று சுழற்சி: வானிலை ஆய்வாளரின் முக்கிய தகவல்
நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும் என வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு அந்தமான் கடற் பகுதியில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதால் இன்றைய நாளில் இருந்து வானிலை சீரற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடலிற்கு இந்த காற்று சுழற்சியானது செல்லவிருக்கிறது.
இதையடுத்து இலங்கையை நோக்கி மீண்டும் 18, 19ஆம் திகதிகளில் காற்று சுழற்சி வரும் எனவும், 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பகுதிக்குள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் விளைவான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை வீழ்ச்சியானது அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடற் பகுதியில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி மேலும் ஒரு காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும்.
அது வலுவடைந்து எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கி, தமிழ்நாட்டை நோக்கி செல்லும்.
எனவே மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் அதிகமாக மழை வர வாய்ப்புண்டு.
மேலும் 2004 ஆம் ஆண்டு சுனாமியானது நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் பௌர்னமி தினத்தில் வந்தது. இவ்வாண்டும் அதே மாதிரியான நாட்கள் அமைகிறது. ஆகவே இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image credit: Pixabay
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |