கடலுக்குள் வெடித்த சக்தி வாய்ந்த எரிமலை... அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்கோ அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அலாஸ்கா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் சீற்றத்துடன் காணப்பட்ட எரிமலை திடீரென்று வெடித்தது. இந்த நிலையில், ரிக்டர் அளவில் 7.4 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டு, தற்போது அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடற்கரை மொத்தமும், அலாஸ்கா மற்றும் ஹவாய் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகிகள் அளிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் நேரப்படி சுனாமியின் முதல் தாக்கம் 7.45 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலும், அதன் பின்னர் 8.10 மணியளவில் சான் பிரான்சிஸ்கோவிலும் தாக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு கடற்கரை மக்கள் தயார் நிலையிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் பெர்க்லி மெரினாவில் படகுகளில் வசிக்கும் எவரையும் கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவை காவல்துறை பிறப்பித்தது.
சனிக்கிழமை அதிகாலை, ஹவாய் பகுதியில் ஏற்கனவே 2.7 அடி வரை சுனாமி அலை தென்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அச்ச்சுறுத்தும் வகையில் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் கடற்பகுதியில், உள்ளூர் நேரப்படி 5.10 மணியளவில் கடலுக்கடியில் கடும் சீற்றத்துடன் எரிமலை ஒன்று வெடித்துள்ளது. இதம் தாக்கம் காரணமாக சுனாமி அலைகள் ஏற்பட்டு சரியாக 20 நிமிடங்களுக்கு பின்னர் டோங்கோ தீவு நாடு முழுவதும் சுனாமி அலையால் சூழப்பட்டது குறிப்பிடத்தக்கது.