அமெரிக்க கடற்கரையை தாக்கும் மிக ஆபத்தான சுனாமி: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்
கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ஏற்படவிருக்கும் மிக ஆபத்தான சுனாமி ஒன்று துறைமுகத்தின் மொத்த வணிகத்தையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 7.0கும் அதிகமாக பதிவாகும் ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்றால், அதனால் உருவாகும் சுனாமியானது 4 அடி உயர அலைகளை உருவாக்கும் என புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது மொத்தமாக அழிவை ஏற்படுத்தாது என்றாலும், படகுகளையும் துறைமுகத்தில் உள்ள வணிகங்களையும் சேதப்படுத்தும். டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் மிக ஆபத்தான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றே நம்பப்பட்டது.
ஆனால், 2018ல் பலுவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியது. சான் டியாகோவை பொருத்தமட்டில் சுனாமி ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் காணப்படுவதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளில் சான் டியாகோவில் 11 சுனாமிகள் மட்டுமே நிகழ்ந்தன.
ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சிலி, அலாஸ்கா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பங்களிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.