சசிகலா முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்த டிடிவி தினகரன் மகள் திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய பிரபு: வெளியான புகைப்படங்கள்
தமிழகத்தில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணியின் திருமணம் கோலகலமாக நடைபெற்று முடிந்தது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி.வி தினகரன், அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி க்கும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்- ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
அப்போதுசசிகலா சிறையில் இருந்ததால், இந்த திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிமையாக நடத்திய டிடிவி தினகரன், சசிகலா சிறையில் இருந்து வந்த பின்பு, அவருடைய தலைமையில், மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்.
அதன் படி சசிகலா விடுதலையான நிலையில், இவர்களின் திருமணம் இன்று திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் சசிகலா, நடிகர் பிரபு குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த திருமணம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவிருந்ததாலும், உறவினர்கள், கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், கடைசி நேரத்தில் இவர்களின் திருமணம் திருமண மண்டபத்திலே நடைபெற்றது.
இன்று காலை 7.45 மணிக்கு மணமேடைக்கு மணமகன் வர, அவரைத் தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சசிகலாவும் இளவரசியும் மேடையின் வலதுபுறம் தனி இருக்கைகளில் அமர்ந்தனர்.
வேலூர் பொற்கோவில் தலைவர் ரமணியம்மா தாலியை ஆசீர்வதித்து எடுத்துக்கொடுக்க, சசிகலா முன்னிலையில் காலை 9:25 மணிக்கு திருமணம் கோலகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்த திருமணத்தின் நிச்சயதார்த்தம் நேற்று மாலை திருவண்ணாமலையின் வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஹோட்டலில் இருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடந்தது.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.