பிரித்தானிய இளம்பெண்ணின் இதயத்தைத் திருடியதாக பகீர் குற்றச்சாட்டு: மருத்துவமனை அளித்துள்ள விளக்கம்
துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலில் இதயம் மாயமாகியிருந்தது கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.
சுற்றுலா சென்ற குடும்பம்
இங்கிலாந்திலுள்ள Portsmouthஐச் சேர்ந்த பெத் மார்ட்டின் (Beth Martin, 28) தனது கணவரான லூக் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த மாதம் 27ஆம் திகதி துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென பெத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் Marmara University Hospital என்னும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் பெத் உயிரிழக்க, பெத்தின் உடலை பிரித்தானியாவுக்குக் கொண்டு வந்த அவரது குடும்பத்துக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், பெத் எதனால் இறந்தார் என துருக்கி மருத்துவமனை கூறாததால், பிரித்தானியாவில் பெத்தின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, அவரது உடலில் இதயம் மாயமாகியிருந்தது தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர் அவரது குடும்பத்தினர்.
துருக்கியில் மருத்துவர்கள் பெத்தின் இதயத்தைத் திருடிவிட்டதாக பெத் குடும்பத்தின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அளித்துள்ள விளக்கம்
இந்நிலையில், Marmara பல்கலை மருத்துவமனை, பெத் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தாங்கள் அவரது உடலில் கத்தி வைக்கவே இல்லை என அம்மருத்துவமனை கூறியுள்ளது.
அதே நேரத்தில், பெத்தின் உடல் தடயவியல் மருத்துவ நிறுவனம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டதாக Marmara பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், அங்கு அவருக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை முறையில் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையில், பெத் மரணம் குறித்து துருக்கி சுகாதாரத்துறை தெரிவித்துள்ள செய்தி ஒன்றில், பெத் பல உறுப்புகள் செயலிழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெத் துருக்கிக்கு சுற்றுலா புறப்படும் முன், அவர் பிரித்தானியாவிலிருக்கும்போது சாப்பிட்ட ஒரு உணவில் இருந்த நச்சுப்பொருளால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறியதாகவும், அதனால் அவர் தடயவியல் தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் துருக்கி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெத் மரணம் குறித்து உருப்படியான தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், அவரது மரணம் தொடர்பில் Marmara மருத்துவமனை மீது விசாரணை துவக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |