கலெக்டர், SP பதவிகளில் சரிபாதி பெண்களுக்கு - தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
கரூர் விடயத்தில் என் மீது ஏன் பழி போட்டிங்க என விஜய் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள QR அட்டையுடன் கூடிய அனுமதி சீட்டு உள்ள 5000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு தனது பேச்சை தொடங்கினார்.

குட்டி கதை
அதன் பிறகு ஒரு குட்டி கதையை தொடங்கிய அவர், ஒரு பெரிய ஊரில் 4 வழிச் சந்திப்பு இருக்கிறது. அதன் நடுவில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்றது. யாரும் அந்த காளையின் பக்கத்தில் கூட போக முடியவில்லை. அந்த காளையை அடக்கினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பார்க்காத காளையா? என அடக்க நினைத்தார்கள். ஆனால் அனைவரையும் காளை தூக்கி வீசியது.
அப்போது கூட்டத்தை விலக்கி ஒரு சின்ன பையன் செல்கிறான். அவனை பார்த்து எங்களால் முடியவில்லை நீ என்ன செய்ய போற, அனுபவமுள்ள நாங்களே அடிபட்டு கிடக்கிறோம் என ஏளனமாக பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் பரிதாபப்படுகிறார்கள்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த சின்ன பையன் ரெண்டு பாக்கெட்டிலும் கைவிட்டு கொண்டு கெத்தாக சென்றான். அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் போதும் காளை அவனை நோக்கி வேகமாக வந்தது.
காளை அருகில் வந்தவுடன் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த புல்லு கட்டை எடுத்து நீட்டினான். காளை ஆக்ரோஷத்தை கைவிட்டு அமைதியாக சாப்பிட்டது. அடிபட்டுகிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்கப்போட்டபடி இருந்தனர்.
பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நச நச என்று பேசினார்கள். அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர் காளையை எப்படி அடக்கின என கேட்டார். அதற்கு காளை கோபமாக இருந்தது போல் தெரியவில்லை. பசியாக இருந்தது போல் தெரிந்தது. அதனால் புல்லு கட்டை நீட்டினேன் என கூறினான்.
அனுபவசாலி, சிறியவர் என்று யாராக இருந்தாலும், என்ன செய்து அந்த பிரச்சனையை சரி செய்கிறார்கள் என்பதுதான் மேட்டர். நீ சூப்பருப்பா என்று அந்த பையனை பெரியவர் பாராட்டினார்.
அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாடு அரசியல் களம். அந்த பெரியவர்கள் தமிழ்நாடு மக்கள். பாக்கெட்டிற்குள் கெத்தாக வலம் வந்தது நம் தவெக. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

ஒவ்வொரு ஊராகச் சென்று உங்களை அனைவரையம் சந்திக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகள் பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும்.
அதனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நம்முடைய ஆட்சி அமைந்ததும் நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களை எல்லாம் சந்திப்பேன்.
கரூர் விடயத்தில் என் மீது பழி
மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால், இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக.
இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கிற போர். 5 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி இல்ல, 50 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி, இது அதிசய தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள்.
இந்த விஜய் ஊழலை எதிர்ப்பதால், மக்களோடு மக்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆதங்கம். அதனால் நம்மை எதிர்க்கிறார்கள். என்னை அசிங்கமாகப் பேசினால், அது மக்களைப் பேசியது மாதிரி.நானும் மக்களும் ஒன்று. விஜயும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும் மாதிரி. அதை பிரிக்கவே முடியாது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்கிட்ட இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு உங்க கிட்ட இருக்கிற சொத்து எவ்வளவு? வெளிப்படையா அறிவிக்க முடியுமா? அந்த சொத்தெல்லாம் உங்களுக்கு எப்படி வந்துச்சுனு சொல்ல முடியுமா?
நமக்கு எல்லோரும் நண்பர்கள் தான் என ஸ்டாலின் சார் பேசியுள்ளார். நண்பர்களா இருந்த கரூர் விடயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா சிஎம் சார்?
நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் எனில் ஏன் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள்? எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு பொய்களை அடித்துவிடுகிறீர்கள்.
தேர்தல் வாக்குறுதிகள்
காஞ்சிபுரத்தில் சொன்னது போல் உங்களுக்கு இங்கு சில வாக்குறுதிகளை அளிக்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்த உடன், போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பாட திட்டம் மாற்றப்படும். அடிப்படை அரசியல் சாசனம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண்களுக்கு சுத்தமான பாதுகாப்பான கதவுகள் பொருத்தப்பட்ட rest room அமைக்கப்படும். போதை இல்லா தமிழ்நாடு உருவாக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் சரி பாதி பெண்களுக்கு வழங்கப்படும். மலை கிராமங்களிலும் பிரசவ வசதி ஏற்படுத்தி தரப்படும். மலை பகுதிக்குக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும்.
தென் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலன்களுக்கு தனியாக வாரியம் அமைக்கப்படும்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |