மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கணவனைக் கொன்ற பெண்ணுக்கு உதவிய மேலும் இருவர் கைது
மேகாலயா தேனிலவு கொலை வழக்கில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தேனிலவு கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ராஜா கொலை தொடர்பாக அவரது மனைவியான சோனம், சோனமுடைய காதலரான ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார், ஆகாஷ் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
மேலும் இருவர் கைது
இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இரண்டுபேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
மேகாலயாவில் ராஜா கொல்லப்பட்ட நிலையில், சோனம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள Ghazipur என்னுமிடத்தில் பொலிசாரிடம் சரணடைந்தது நினைவிருக்கலாம்.
தான் எப்படி மத்தியப்பிரதேசத்துக்கு வந்தேன் என்பது நினைவில்லை என்றும், தன்னை யாரோ கடத்திவந்ததாகவும் கூறியிருந்தார் சோனம்.
ஆனால், உண்மையில் அவர் ராஜா கொல்லப்பட்டதும் மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூர் என்னுமிடத்துக்கு வந்து அங்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியுள்ளார்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை, கொலையாளிகளில் ஒருவரான விஷால் சௌஹானுக்கு, ஜேம்ஸ் (Silome James) என்பவர் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், ஜேம்ஸ் மற்றும் பல்வீர் (Balvir Ahirwar) ஆகிய இருவரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.
கணவனைக் கொலை செய்த சோனம், சம்பவ இடத்திலிருந்து எடுத்துவந்த நகைகள், ஒரு லாப்டாப் மற்றும் சோனமுடைய காதலனான ராஜ் குஷ்வாஹாவுக்குச் சொந்தமான ஒரு ஆயுதம் ஆகியவற்றை மறைத்துவைக்க சோனமுக்கு உதவியதாக ஜேம்ஸ் மற்றும் பல்வீர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பல்வீர், சோனம் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேனாக இருந்துள்ளார்.
தான் சோனம் கொடுத்த சில பொருட்களை எரித்துவிட்டதாக ஜேம்ஸ் கூறியுள்ள நிலையில், அவர் கூறிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
ஆனால், அந்த இடத்தில் ஆயுதமோ, நகைகளோ, லேப்டாப்போ கிடைக்கவில்லை. விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |