ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் 2 பிரித்தானியர்கள் மாயம்: குடும்பத்தினர் கவலை
உக்ரைனில் காணாமல் போன இரண்டு பிரித்தானியர்களின் குடும்பங்கள், போருக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைனில் காணாமல் போன இரண்டு பிரித்தானியர்களின் குடும்பங்கள், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.
இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள்
உக்ரைனில் காணாமல் போன 2 பிரித்தானிய தன்னார்வலர்கள் (ஆண்கள்) கிறிஸ் பாரி (Chris Parry) மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா (Andrew Bagshaw) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Missing: Christopher Parry and Andrew Bagshaw / ES Composite
இருவரும் பிப்ரவரி 2022-ல் ரஷ்ய படையெடுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டு செய்து, போரின் முன்னணியில் இருந்து மக்களை வெளியேற்ற உதவியுள்ளனர்.
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள சோலேடார் நகருக்கு இருவரும் சென்று கொண்டிருந்த போது, கிறிஸ் பாரி தனது துணையான ஆண்ட்ரூ பாக்ஷாவுடன் கடைசியாக காணப்பட்டார்.
செப்டம்பரில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் ஐந்து பிரிட்டன்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் காணாமல் போன செய்தி வந்துள்ளது.
துயரத்தில் பிரித்தானியர்கள் இருவரின் குடும்பம்
உக்ரைனில் தன்னார்வத் தொண்டு செய்யும் தங்கள் குடும்ப உறுப்பினர் காணாமல் போனது குறித்த கவலைகளை இரு குடும்பத்தினரும் பகிர்ந்து கொண்டனர்.
கிறிஸ் பாரியின் காதலி மற்றும் குடும்பத்தினர்
கிறிஸ் பாரியின் பெற்றோர் மற்றும் காதலி உட்பட அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில், "கிறிஸின் உடல்நிலை மற்றும் அவரது இருப்பிடம் குறித்து நாங்கள் மிகவும் கவலையுடனும் அக்கறையுடனும் இருக்கிறோம்.." என்றும், அவரைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், அவர் இரக்கமுள்ளவர் மற்றும் அக்கறை உள்ளவர் என்றும் அவரது குணங்களைப் பாராட்டினர்.
ஆண்ட்ரூ பாக்ஷாவின் குடும்பத்தினர்
மறுபுறம், நியூசிலாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ பாக்ஷாவின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையில், "ஆண்ட்ரூ மிகவும் புத்திசாலி, சுதந்திரமான எண்ணம் கொண்டவர், உக்ரைன் மக்களுக்கு உதவ தன்னார்வலராகச் சென்றவர், இது தார்மீக ரீதியாக சரியானது என்று நம்பினார்.." என்று கூறினர்.
மேலும், அவர் உணவு மற்றும் மருந்துகளை விநியோகித்து வருவதாகவும், போர்க்களத்தின் அருகே இருந்து வயதானவர்களை நகர்த்த உதவுவதாகவும், அவரது பெற்றோர்கள் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரேனில் காணாமல் போன இரண்டு பிரிட்டிஷ் ஆண்களின் குடும்பங்களுக்கு தாங்கள் ஆதரவளித்து வருவதாக வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.