கடைசியாக கணவன் மற்றும் மாமனார் முகத்தை பார்த்த மனைவி! நள்ளிரவில் தனியாக உடல்களை தகனம் செய்த நண்பர்கள்... கண்ணீர் சம்பவம்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பர் மற்றும் அவர் தந்தைக்கு ஆபத்தையும் மீறி இரண்டு நண்பர்கள் இறுதிச்சடங்கு நடத்தி உடல்களை தகனம் செய்தது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் பவன் குமார் (45). இவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
பவனுடன் அவர் தந்தை சுதாகர் பிரசாத் யாதவ், மனைவி, மாமியார் மற்றும் 6 மாத குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இறுதியில் குழந்தையை தவிர மற்ற நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதில் பவனின் மனைவி மற்றும் மாமியார் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஆனால் பவன் மற்றும் பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அவர்களின் இறுதிச்சடங்குக்கு கொரோனா பயம் காரணமாக யாரும் வராத நிலையில் பவனுடன் இளம் வயதில் இருந்து ஒன்றாக படித்த அவர்களின் நண்பர்களான பிரபாகர் மற்றும் சுப்பரவகுலு ஆகிய இருவரும் சேர்ந்து தந்தை மகனுக்கு இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், உயிரிழந்த பவன் மற்றும் பிரசாத்தின் முகத்தை கடைசியாக பவன் மனைவியிடம் காட்டினோம்.
பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு சடலங்களை தகனம் செய்தோம். இதில் ஆபத்து உள்ளது என எங்களுக்கு தெரியும், ஆனால் எங்கள் நண்பனை அனாதையாக அனுப்ப நாங்கள் விரும்பவில்லை.
பவனுடன் நாங்கள் ஒன்றாக படித்து அருகருகில் உள்ள வீட்டில் தான் வசித்தோம், அவனுடனான நட்பை என்று மறக்க முடியாது என கூறியுள்ளனர்.