மரபை மீறிய அமெரிக்க அதிபர்... கண்டுகொள்ளாத ராஜ குடும்பம்: புன்னகையை மட்டுமே வெளிக்காட்டிய மகாராணியார்
பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வரும் எந்த நாட்டுத் தலைவரானாலும், நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும்போது, மகாராணியாருக்கு முன்னதாகவே அந்த இடத்துக்கு வந்துவிடவேண்டும். அதன் பிறகுதான் அங்கு மகாராணியார் வருவார்.
அத்துடன், மகாராணியார் புறப்பட்டுச் சென்றபிறகுதான் மற்றவர்கள் அந்த இடத்திலிருந்து நகரவேண்டும். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ராஜ மரபு. ஆனால், அந்த மரபை மீறியுள்ளார் அமெரிக்க அதிபராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன். G7 உச்சி மாநாட்டுக்காக உலகத்தலைவர்கள் பிரித்தானியா வந்துள்ள நிலையில், இங்கிலாந்திலுள்ள Cornwallஇல் அவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மற்ற தலைவர்கள் எல்லாம் முன்னரே வந்துவிட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மட்டும் வரவில்லை.
மகாராணியார், இளவரசர் சார்லஸ், கமீலா, கேட் ஆகியோருடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் ஜோ பைடனின் கார் அங்கு வந்து சேர்ந்தது. உண்மையில் அது ஒரு மரபு மீறல். ஆனால், மகாராணியாரோ மற்றவர்களோ, அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக அவரை மகாராணியார் சந்திக்கும் நிலையில், அந்த மகிழ்ச்சியை மட்டுமே அவர் புன்னகையால் வெளிப்படுத்தினார்.
மகாராணியார் முகமெல்லாம் புன்னகையாக, ஜோ பைடனுடன் மட்டுமல்ல, வந்திருந்த அனைத்து தலைவர்களுடனும் அளவளாவுவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காண முடிகிறது.