குழந்தைகளை Tool ஆக பயன்படுத்திய முதல்வர் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் கோட்டை விடுகிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி வன்கொடுமை
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி, வன்கொடுமை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்டுள்ளார்.
சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுமியை வன்கொடுமை செய்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான பிபின் மஞ்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.

வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே தொல்லை.
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |