PF கணக்கில் இனி இந்த சான்று ஏற்கப்படாது! UIDAI அதிரடி உத்தரவு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் ஏற்கப்படாது என UIDAI உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை 2009யில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடிப்படையான சான்றாக மாறியது.
தற்போது வங்கி கணக்கு உட்பட பெரும்பாலான விடயங்களுக்கு ஆதார் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த நிலையில் UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) PF கணக்குகளில் இனி பிறப்பு சான்று ஆவணமாக ஆதார் ஏற்கப்படாது என அறிவித்துள்ளது.
அத்துடன் ஆதார் என்பது ஒரு தனித்துவமான அடையாளமாக இருந்தாலும், ஆதார் சட்டம் 2016யின் படி, பிறந்த திகதிகான ஆதாரமாக ஆதார் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ஆதார் என்பது பிறப்பு சான்று அல்ல. அடையாள சரிபார்ப்பை மட்டுமே ஆதார் வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
இதனால் பிறந்த திகதியை உறுதி செய்வதற்கு சமர்ப்பிக்கப்படும் ஆவண பட்டியலில் இருந்து ஆதாரை நீக்க வேண்டும் எனவும் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து PF அமைப்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது UIDAIயின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் சுற்றறிக்கை ஆகும்.
இந்த அறிக்கை வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல அலுவலங்கள், வருங்கால வைப்பு நிதி ஆணையர்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பிறந்த திகதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், PF கணக்குகளுக்கான மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்யும்படியும் UIDAI அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |