பிரித்தானியாவில் 3 மாதங்களுக்கு பின் மீண்டும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் மார்ச் 17-ஆம் திகதிக்கு பின் அதிக அளவாக கொரோனா பாதிப்புக்கு 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 19-ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து அமுல்படுத்தினார். இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகள் கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியானது.
இதனால், தொற்று பரவல் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். எனினும் இந்த நடைமுறை அமுலானது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 23,511 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், பிரித்தானியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57,45,536-ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை, 47 மில்லியன் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 37 மில்லியன் பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த மார்ச் 17-ஆம் திகதிக்கு பின் நேற்று ஒரே நாளில் (செவ்வாய்க்கிழமை) மிக அதிக அளவாக 131 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,29,303-ஆக உயர்ந்துள்ளது.