ஏரியில் தத்தளித்து உயிரிழந்த 19 வயது இளைஞர்: கடலில் மாயமான பெண்: தீவிர தேடுதல் வேட்டை
பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்
லேக்(Lake) மாவட்டத்தின் கிராஸ்மியர்(Grasmere) ஏரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏரியில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கும்ப்ரியா காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு கும்ப்ரியா காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பெண்
சனிக்கிழமை இரவு வேமவுத்(Weymouth) கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் கடலுக்குள் சென்றதாக பொதுமக்களில் ஒருவர் இரவு 11.05 மணிக்கு டோர்செட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு சென்ற பெண் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் திரும்பி வெளியே வரவில்லை என்றும் நம்பப்படுகிறது.
காணாமல் போனதாக கூறப்படும் பெண் நடுத்தரமான உடல் அமைப்பு கொண்டவர் என்றும், வெளிர் நிறத்தில் உள்ள நீண்ட ஆடையை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலில் இறங்கி காணாமல் போனதாக நம்பப்படும் பெண்ணை கண்டுபிடிப்பதற்காக கடல்வழி மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |