100 மில்லியன் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானம் செய்யும் பிரித்தானியா!
பிரித்தானியா 2022-ஆம் ஆண்டுக்குள் 100 மில்லயன் உபரி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை ஜி7 உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக இதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.
"இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியின் முடிவாக, எங்கள் உபரி தடுப்பூசிகளில் சிலவற்றை தேவைப்படும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்" என்று பிரதமர் அலுவலகம் முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தை அதிகரிப்பதில் அமெரிக்காவும் பிற பணக்கார நாடுகளும் கணிசமான பங்கை வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பிரித்தானியா இந்த முடிவை எடுத்துள்ளது.
92 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் ஆபிரிக்க யூனியனுக்கும் 500 மில்லியன் அளவிலான ஃபைசர் தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரித்தானியாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் முதன்மையாக உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு, 5 மில்லியன் டோஸ்களை நன்கொடையாக அளிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 25 மில்லியன்கள் உட்பட, அடுத்த ஆண்டுக்குள் மேலும் 95 மில்லியன் டோஸ்களை நன்கொடையாக வழங்க பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.
100 மில்லியன் டோஸில் 80 சதவீதம் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸுக்குச் (Covax) செல்லும், மீதமுள்ளவை தேவைப்படும் நாடுகளுடன் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.