ஆபத்தை நோக்கி பிரித்தானியா! ஒரே வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பதிப்பு: மூன்றாவது அலை பரவல் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கொரோனா வழக்குகள், கடந்த ஒரு வாரத்தில் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், மூன்றாவது அலை அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அவசரகால நடவடிக்கையாக, தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்த முதல் ஐரோப்பிய நாடு பிரித்தானியா. இதன் காரணமாகவே, இப்போது இங்கு கொரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக குறைந்து வந்தது.
ஆனால், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால், டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தற்போது பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் காணப்பட்டாலும், இப்போது இது அச்சுறுத்தும் வகையில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த 28 நாட்களுக்கு பிறகு, பிரித்தானியாவில் 7540 பேர் புதித்தாக கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களில் 42,275- பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதற்கு முந்தைய ஏழு நாட்களில் 28,223-பேர் பாதிக்கபட்டிருந்த நிலையில், தற்போது அது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே லண்டனின் Imperial கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் Neil Ferguson, பிரித்தானியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை இருப்பதாக எச்சரித்திருந்த நிலையில், அது போலவே புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவை சேர்ந்த ஒருவர் நாங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறோம் என்று கூறியிருந்தார். அடிப்படையில் இது கணிசமான மூன்றாவது அலையின் ஆபத்து இருப்பதாகக் கூறுகிறது,
ஆனால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்பதை உறுதியாக கூற முடியாது. இது இரண்டாவது அலையை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம் அல்லது அது அதே அளவிலான பாதிப்பை கொடுக்கலாம் என்று கூறியிருந்தார்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் வரும் 21-ஆம் திகதி முழு தளர்வை அறிவிப்பாரா? இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது பரவும் மூன்றாவது அலையால் இது இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.