இந்திய வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறிய பிரித்தானிய நகரம்! அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் உள்ள போல்டன் (Bolton) நகரம் இந்திய வைரசுக்கான 'ஹாட்ஸ்பாட்' என அழைக்கப்படுகிறது.
இந்திய கோவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த போல்டன் நகரம் அதிக அளவிலான பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
மேலும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நகரத்தின் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சராசரியாக 100,000-க்கு 20.6 பேர் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் போல்டனில் சமீபத்திய தொற்று விகிதங்கள் 100,000 பேருக்கு 50 முதல் 89 வழக்குகள் வரை அதிகரிப்பதைக் காட்டுகின்றன.
குறிப்பாக ரம்வொர்த் தெற்கு பகுதியில் மிகவும் கவலைக்குரிய வகையில் தொற்று விகிதம் 500 மடங்கு அதிகரித்து, 100,000 பேருக்கு 359.3 பேர் என்ற விகிதத்தில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மொத்தம் 48 பேர் இந்திய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போல்டனில் மட்டும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போல்டனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு வகை வைரஸ்களும் தீவிரமாக பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.