போருக்கு விருப்பம் இல்லையென்றால் உடனடியாக வெளியேறுங்கள்: பிரித்தானியா அமைச்சர் அதிரடி!
ரஷ்யா உக்ரைன் இடையே நிலவும் பிரச்சனைக்கு ரஷ்யா உண்மையாகவே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என நினைத்தால் உடனடியாக உக்ரைனின் எல்லையில் நிறுத்தியுள்ள படைகளை வெளியேறுங்கள் என பிரித்தானியாவின் வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே பெரும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவ்வில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ், ரஷ்யா உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் இருநாட்டு மக்களையும் அதிக அளவில் பாதித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளையும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளதால் நேட்டோ பாதுகாப்பு அமைப்பு அறிவித்தவாறு ரஷ்யா உக்ரைனுக்குள் படையெடுத்தால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ், ரஷ்யா உண்மையாகவே இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக ரஷ்ய படையை உக்ரைன் எல்லையில் இருந்து விலக்கி கொள்ளுங்கள், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்றால் 1,00,000 படைகளை எல்லையில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் செய்தியாளர்களை சந்திக்கும் போது ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் மாஸ்கோவ்வில் உள்ள அறியப்படாத வீரர்களின் கிரெம்ளின் சுவரை சென்றும் பார்வையிட்டார்.