ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கும் சிக்கல்: மீண்டும் பயண விதிகளை மாற்றிய பிரித்தானியா
பிரித்தானியா மீண்டும் பயண விதிகளை மாற்றியுள்ளதால் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கே சிக்கல் ஏற்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், பிரித்தானியா, ஆகத்து மாதம் 12ஆம் திகதி அன்று புதிதாக ஒரு பயண விதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இரண்டு வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அதாவது, ஒருவர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், அவர் பெற்றுக்கொண்ட இரண்டு டோஸ்களும் வெவ்வேறு நிறுவன தயாரிப்பான தடுப்பூசிகள் என்றால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் என கருதப்படமாட்டார்கள்.
இப்போது பல நாடுகள் தடுப்பூசிகளை கலந்து அளித்துவருகின்றன. குறிப்பாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை இருப்பது தெரியவந்ததும், முதல் டோஸாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்கிய பல நாடுகள், இரண்டாவது டோஸாக பைசர் அல்லது மொடெர்னா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை வழங்கத் துவங்கிவிட்டன.
அப்படி இரண்டு வெவ்வேறு நிறுவன தடுப்பூசி பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களில் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலும் ஒருவர்.
ஆக, பிரித்தானியாவின் புதிய பயண விதிகளின்படி, இப்போது அவராலும்கூட பிரித்தானியாவுக்கு செல்ல முடியாது.
இப்போதைக்கு இங்கிலாந்து மட்டுமே இந்த புதிய விதியை பின்பற்றுகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகள் இன்னமும் தங்கள் விதிகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.