பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: குற்றவாளிக்கு ஜேர்மன் நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி
போர்ச்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதியரின் குழந்தை மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபர் நாட்டைவிட்டு வெளியேற ஜேர்மன் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.

குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கிறிஸ்டியன் (Christian Brueckner) என்னும் நபர், வேறொரு மோசமான குற்றத்துக்கான ஜேர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆக, பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய மூன்று நாட்டு பொலிசார் மேட்லினைத் தேடிவந்தார்கள்.

குழந்தை மேட்லின் காணாமல்போய் சுமார் 18 ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை, ஒருவேளை அவள் சந்தேக நபரான கிறிஸ்டியனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றால் அவளது உடலும் கிடைக்கவில்லை.
கிறிஸ்டியன், குழந்தை மேட்லின் குறித்து ஏதாவது கூறுவாரா என பொலிசார் காத்திருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், ஜேர்மனியின் Sehnde நகரில் வன்புணர்வுக் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்டியன் தனது தண்டனைக்காலம் முடிவடைந்ததால் தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
குற்றவாளிக்கு ஜேர்மன் நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி
இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேர்மனியை விட்டு வெளியேற ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.

அவர் ஜேர்மனியிலிருந்து வெளியேறினால் அவரை பொலிஸ் கண்காணிப்பில் வைக்கமுடியாது என அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கண்காணிப்பில் இருந்தாலும் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்க ஜேர்மன் சட்டம் அனுமதிக்கவில்லை என்று கூறிவிட்டது நீதிமன்றம்.
ஆக, கிறிஸ்டியன் இனி சுதந்திரமாக ஐரோப்பா முழுவதும் சுற்றிவரலாம்.
இதற்கிடையில், தான் ஜேர்மனியிலிருந்து வெளியேற நிதி உதவி செய்யுமாறு மக்களைக் கோரியுள்ளார் கிறிஸ்டியன்.

இணையத்தில் நிதி உதவி கோரி அவர் முன்வைத்துள்ள கோரிக்கையில், ஒருவழியாக, பொலிசாரின் தொடர்ச்சியான கண்காணிப்பு, மக்களின் தவறான பார்வை, தேடுதல் வேட்டை எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாகி எங்காவது ஒரு நல்ல இடத்துக்குச் செல்ல விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கிறிஸ்டியன்.
ஒரே ஒரு விடயம்தான் என்னிடம் இல்லை. அது பணம் என குறிப்பிட்டுள்ள கிறிஸ்டியன், தான் நாட்டை விட்டு வெளியேற நிதி உதவி செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |