பிரித்தானியாவில் கொரோனாவின் 3-வது அலை! ஜுன் 21-ஆம் திகதி வேண்டாம்: போரிஸை எச்சரிக்கும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி
கொரோனாவின் 3-வது அலைக்கான ஆரம்ப அறிகுறிகள்! இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை பிரித்தானியாவில் கொரோனாவிற்கான மூன்றாவது அலை ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில், பிரித்தானியாவும் அடங்கும். இங்கு கடந்த ஆண்டு கொரோனா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை வெளிபடுத்தியது. இதனால் இங்கு கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள் போன்றவை போடப்பட்டு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் ஜுன் 21-ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தபடவுள்ள நிலையில், அதை சில வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி பிரதமா் போரிஸ் ஜோன்சனுக்கு இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா ஆலோசனை கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரான ரவி குப்தா, பிரித்தானியா அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில், புதிய கொரோனா தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும், பி.1.617 வகை தீ நுண்மியானது. அதிவேக வளா்ச்சியை தூண்டியுள்ளது. பிரித்தானியாவில் ஏற்கெனவே கொரோனாவின் மூன்றாவது அலை பரவத் தொடங்கிவிட்டது.
அதில் நான்கில் மூன்று பங்கு தொற்றுகள், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய வகையைச் சோ்ந்தவை. புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவது இப்போது குறைவாக இருக்கலாம்.
ஆனால், எல்லை அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே தொடங்கி பின்னா் வெடிக்கக்கூடும். எனவே இப்போது நாம் அலையின் தொடக்கத்தைப் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இருப்பினும், பிரித்தானியாவில் ஏராளமானோர் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டிருப்பதால், இந்த அலையானது முந்தைய அலைகளைப்போல பரவுவதற்கு நீண்ட காலம் ஆகும். எனவே, கட்டுப்பாடுகளை ஜூன் 21-ஆம் திகதி தளா்த்துவதை மேலும் சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியவை பொறுத்தவரை அங்கு கொரோனாவால் தற்போது 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கு 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்.
இது போன்ற சூழ்நிலையில் தான் தற்போது
பி.1.617 வகை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இருமடங்கு ஆகியுள்ளது.
இதனால், பொதுமுடக்க தளா்வுகள் திட்டமிட்டபடி அமலுக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.