மகிழ்ச்சிக்கு பதில் பிரித்தானிய தம்பதியருக்கு சோகத்தைக் கொண்டு வந்த லொட்டரி பரிசு!
லொட்டரியில் பெரும் தொகை பரிசாக விழுந்தால் மகிழ்ச்சி அடையாதவர்கள் இருக்க முடியாது.
ஆனால், பிரித்தானியாவில் லொட்டரி வெற்றி ஒரு குடும்பத்தில் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆம், ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த Barry, Jenny Chuwen தம்பதியருக்கு லொட்டரியில் 4.6 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்தது.
பணக்கஷ்டத்திலிருந்த தம்பதியர், லொட்டரியில் வென்ற பணத்தைக்கொண்டு 30 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களை உருவாக்கினார்கள்.
சிறப்பு கவனத்தேவையுடைய குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தையும் அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் அந்த தொண்டு நிறுவனத்துக்கு வரும் பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
லொட்டரியில் பரிசு விழுவதற்கு முன்பு முடிதிருத்துபவராக இருந்தவர் Barry (52). பணம் வந்த பின், அந்த விசாரணை மற்றும் தொழிலில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தம்பதியர் மன அழுத்தத்திற்கு ஆளானார்கள்.
தொழில் முறைப் பழக்கம் மூலமாக, வேறொரு பெண்ணுடன் Barryக்கு உறவு ஏற்பட்டது. பின்னர் தனக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்பட்டதைத் தன் மனைவி Jenny (54)இடம் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரினார் அவர்.
தற்போது இருவரும் பிரிய முடிவு செய்திருக்கும் நிலையில், கிளாஸ்கோவிலிருக்கும் தங்கள் பங்களாவை விற்பனை செய்ய இருக்கிறார்கள் தம்பதியர்.
லொட்டரியில் பரிசு வெல்வது நிச்சயமாக மகிழ்ச்சியைத்தான் கொண்டுவரும் என பலரும் நினைக்கிறார்கள், ஆனால், வெற்றிக்குப் பின்னான வாழ்க்கை அமைதியான நதியில் பயணிக்கும் பயணம் அல்ல என்பது வென்றவர்கள் பலருக்குத் தெரியும் என்கிறார் தம்பதியரின் நண்பர் ஒருவர்.