லண்டனில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை: புதிய சிசிடிவி காட்சியுடன் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
லண்டனில் கொலை செய்யப்பட்டு 24 மணிநேரம் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை சபீனா நெஸ்ஸா வழக்கில், மூன்றாவது சந்தேக நபர் தொடர்பாக புதிதாக ஒரு சிசிடிவி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சபீனா நெஸ்ஸா (Sabina Nessa) கடந்த வெள்ளிக்கிழமை தென்கிழக்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக்கில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பப்பில் நண்பரைச் சந்திக்க நடந்து சென்றபோது, அருகிலுள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் அடுத்த நாள் பூங்காவிற்கு செல்லும் சில பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அவரது சடலம் இலைகளின் குவியலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்திய நாட்களில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 2 பேரை, பொலிஸார் மீண்டும் கைது செய்து விசாரணை செய்தனர்.
அனால், வெள்ளிக்கிழமை சபீனா நெஸ்ஸாவுக்கு நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தும் நேரத்தில், அவர்கள் இருவரும் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது நெஸ்ஸா தாக்கப்பட்ட இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவிலிருந்து கிடைத்துள்ள புதிய சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில், பொலிஸார் மூன்றாவதாக ஒரு நபரை தேடி வருகின்றனர்.
அந்த நபரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைத்தால் விசாரணைக்கு "இன்றியமையாததாக" இருக்கலாம் என்று மெட் இன் ஸ்பெஷலிஸ்ட் கிரைம் கமாண்டிலிருந்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் நீல் ஜான் (Neil John) தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு 12-வினாடி கிளிப்பில் ஒரு வழுக்கை தலை கொண்ட நபர் கருப்பு நிற ஹூடி கோட் மற்றும் சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்து, ஆரஞ்சு நிறப் பொருளைப் பிடித்துக் கொண்டு செல்கிறார். அங்கு கமெரா பொறுத்தப்பட்டிருப்பது தெரிந்ததும், தலைகுனிந்து நடப்பதும், உடனடியாக தனது தலையை மறைப்பதும் தெரிகிறது.
மேலும், அதே பகுதியில் கைப்பற்றப்பட்ட ஒரு சில்வர் நிற காரின் படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த கொலையில் அந்த மனிதனுக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அந்த நபரைத் தெரிந்த அல்லது இது குறித்து தகவல் அறிந்த எவரும் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு, பெருநகர காவல்துறை உதவி ஆணையர் லூயிசா ரோல்ஃப் (Louisa Rolfe) கேட்டுக்கொண்டார்.