பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், அதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
வறட்சி காரணமாக, பாண், பியர், காலை உணவுக்கான தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கத் தேவையான, பார்லி, ஓட்ஸ், சிலவகை எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, இந்த ஆண்டில் 19.5 மில்லியன் டன்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக Energy and Climate Intelligence Unit (ECIU) என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு, உணவு தானிய உற்பத்தி தொடர்பில் ஆவணப்படுத்தல் துவங்கியபிறகு, இதற்கு முன் 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட தானியங்களின் உற்பத்தி 19.8 மெட்ரிக் டன்களாக இருந்ததே இதற்கு முன் குறைவான உற்பத்தியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு 390 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சூழலிலும், சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விடயமாகும்.
பிரித்தானியாவின் முக்கிய சாகுபடி பயிரான கோதுமையைப் பொருத்தவரை, மழையின்மையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தங்களால் முடிந்ததை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் தீவிர முயற்சியில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்ய, கிடைத்தது, வழக்கமான அளவில் பாதிதான் உள்ளது.
வழக்கமாக, சராசரியாக ஹெக்டேர் ஒன்றிற்கு 7.9 டன் கோதுமை விளையும் நிலையில், இம்முறை, வெறும் 6.8 டன் கோதுமைதான் விளைந்துள்ளதாக Agriculture and Horticulture Development Board (AHDB) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக, பிரித்தானியா தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதில் உணவு உற்பத்தி என்னும் விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |