ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி
British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபரின் உடலை ஒப்படைக்குமாறு பிரித்தானியக் குடும்பம் ஒன்று பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளது.
பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றின் முன் ஒரு கூட்டம் சீக்கியர்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்
பிரான்சிலுள்ள Dunkirk நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நபர்கள் கையில் வைத்துள்ள பதாகைகளில் ஒரு சீக்கியரின் படம் இடம்பெற்றுள்ளது.

அவரது பெயர், ஜஸ்மீத் வத்வா (Jasmeet Wadhwa, 32). இந்த ஜஸ்மீத், தனது தாயாகிய ஹர்பன்ஸ் கௌர் வத்வாவுடன் (Harbans Kaur Wadhwa) ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
ஏப்ரல் மாதம், பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், தன் தாய் கண் முன்னே உயிரிழந்துள்ளார் ஜஸ்மீத்.
கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி
விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தும் அவரது தாயும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடமிருந்து தப்பி பிரான்சுக்கு வந்துள்ளார்கள்.

அவர்கள் எங்கிருந்து புறப்பட்டவர்கள், ஏன் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
அப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, பிரான்ஸ் வந்தடைந்த ஜஸ்மீத்தும் அவரது தாயும் சிறுபடகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, ஜஸ்மீத்தும், சூடான் நாட்டவர் ஒருவரும் ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல் பிரான்சுக்கே திரும்பக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜஸ்மீத்தின் தாயும் பிரான்சுக்கே சென்றுள்ளார்.
இப்போது, பிரான்சில் வைக்கப்பட்டுள்ள ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவருடைய உறவினர்கள் பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாகத்தான் Dunkirk நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தின் உடலைக் கோரி பிரான்ஸ் சென்றுள்ளவர்கள், பிரித்தானியர்கள். அதாவது, பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சீக்கியர்கள்.
ஆக, ஜஸ்மீத்தின் உறவினர்கள் பிரித்தானியாவில் முறைப்படி அனுமதி பெற்று வாழ்ந்துவரும் நிலையில், ஜஸ்மீத் ஏன் முறைப்படி பிரித்தானியா வர விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், ’one in, one out’ திட்டத்தின் கீழ் தன்னை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு ஜஸ்மீத்தின் தாய் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், அவரிடம், அவர் ஆப்கன் நாட்டவர் என்பதற்கான அடையாள ஆவணமான Tazkira என்னும் ஆவணம் இல்லை.
ஆகவே, பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில்தான், ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, பிரித்தானியாவிலிருக்கும் அவரது உறவினர்கள் பிரான்சுக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பொதுவாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படுவதில்லை.
அவர்கள் உடலை ஒப்படைக்கக்கோரி அவர்களுடைய உறவினர்கள் இதுபோல் வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதில்லை.
ஆகவேதான் இந்த செய்தி கவனம் ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |