மாணவிகளை பாவாடை அணிந்து வரச் சொன்ன ஆசிரியர்! பிரித்தானிய பள்ளியில் எழுந்த சர்ச்சை
இங்கிலாந்து இடைநிலை பள்ளியில், ஷார்ட்ஸ் அணிந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் Northumberland, Rothburyயில் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் Dr Thomlinson Church of England Middle School-ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
அப்பள்ளியில் வேலைபார்க்கும் பெண் ஆசிரியர் ஒருவர், பெண் குழந்தைகளிடம் உடற்கல்வி (physical education) வகுப்புகளுக்கு ஷார்ட்ஸ் அணியாமல், PE பாவாடை (PE Skirt) அணிந்து வருமாறு அறிவுரை கூறியுள்ளார்.
ஏனெனில், குட்டையான ஷார்ட்ஸ் அணிவது கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமைக்கான 'ஆபத்தை' ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். மேலும், இந்த கோடையில் நீங்கள் மற்றவர்களால் குறிவைக்கப்படாமல் இருக்க பாவாடையை அணிந்துகொள்வது நல்லது என கூறியுள்ளார்.
மாணவிகள் இதனை தங்கள் வீட்டில் கூற, ஆவேசமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இது அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும், இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்து தானே தவிர, பள்ளியின் கருத்து அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது.
மேலும், குறித்த பெண் ஆசிரியர் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து மன்னிப்பு கோரினார்.