தொடர்ந்து தொந்தரவு செய்யும் பிரான்ஸ்... வாயை அடைக்க பிரித்தானியா வழங்கும் பெரிய தொகை
புலம்பெயர்வோர் அடிக்கடி ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு பெரும் தொகை ஒன்றை பிரித்தானியா வழங்க முடிவு செய்துள்ளது.
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது பிரித்தானியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விடயமாகியுள்ளது.
2021ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 8,452 பேர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே 430 புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பிரான்சிலிருந்து பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்தார்கள்.
இந்நிலையில், இந்த தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்துகொண்டுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்திபட்டேல். அதன்படி, புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்காக பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரீத்தி பட்டேல் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmaninஉடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் பொலிசாரின் எண்ணிக்கை 200 வரை அதிகரிக்கப்பட உள்ளது. அத்துடன், ட்ரோன்கள் முதலான வான்வழி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும், எல்லை தாண்டுவதை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நீண்டகால திட்டம் ஒன்றை உருவாக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.