முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரி; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மற்றோரு சகோதரி! சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்
மெக்ஸிகோவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் முதலையால் தாக்கப்பட்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த மெலிசா மற்றும் ஜார்ஜி லாரி இருவரும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் உடன் பிறந்த இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும் வயது 28.
இருவரும் விடுமுறைக்காக மெக்ஸிகோ சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்குள்ள பிரபலமான சர்ஃபிங் ரிசார்ட்டான Puerto Escondido-விலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள நீர் நிலையில் இருவரும் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மெலிசாவை ஒரு முதலை பயங்கரமாக தாக்கியுள்ளது. அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்துச் சென்றுள்ளது. தனது சகோதரி சில நொடிகளாக மேற்பரப்புக்கு வராததை கவனித்த ஜார்ஜி, உடனடியாக நீருக்கு அடியில் சென்று அவரை தேடி பார்த்துள்ளார்.
அப்போது ஒரு முதலை அவரை கடித்து தனது பிடியில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஜார்ஜி, தனது சகோதரியை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அந்த முதலை அவரையும் கடித்து தாக்கியுள்ளது.
ஆனால் ஒரு வழியாக ஜார்ஜி அந்த முதலையை விரட்டி, மயங்கிய தனது சகோதரியை கரைக்கு கொண்டுவந்துள்ளார். இருவருக்கும் உடல் முழுவதும் பல இடங்களில் முதலை கடித்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இரத்த வெள்ளத்தில் கரைக்கு வந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஜார்ஜிக்கு பல காயங்கள் இருந்தபோதிலும் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், மெலிசா தற்போது கோமா நிலையில் உள்ளார். அதேபோல், அவர் உடலில் ஏற்பட்டுள்ள பயங்கரமான முதலைக்கடி காயங்கள் அவர் உயிருக்கு மேலும் ஆபத்தை உண்டாக்கலாம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் நடந்ததற்கு, இரட்டையர்களுக்கு சுற்றுலாவை ஒருங்கிணைத்த பிரபல பிரித்தானிய டூர் கம்பெனி தான் முக்கிய பொறுப்பு என அவர்களது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.