"இதற்கு மேல் வாழமுடியாது" நீண்டநாள் கொரோனா நோயாளியின் பரிதாப முடிவு!
பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 மாதங்களாக மருத்துவமனையில் அவதிப்பட்டுவந்த கொரோனா நோயாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இங்கிலாந்தில் யார்க்ஷைர் கவுன்டியில் உள்ள லீட்ஸைச் சேர்ந்த ஜேசன் கெல்க் (Jason Kelk, 49) 2020, மார்ச் 31-ஆம் தேதி மார்பு நோய்த்தொற்றுடன் செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஏற்கெனவே டைப் 2 நீரிழிவு மற்றும் ஆஸ்த்மா நோயாளியாவார்.
இந்த நிலையில், அவர் ஏப்ரல் 3-ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு கொரோனாவால் அவருடைய சிறுநீரகம் மற்றும் நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அன்றிலிருந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) வரை, கிட்டத்தட்ட 15 மாதங்களாக மருத்துவமனையில் மிக மோசமான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டில் சில வாரங்கள் உடலில் சற்று முன்னேற்றம் இருந்த நிலையில், வாரம் ஒருமுறை மருத்துவமனையில் உள்ள பூங்காவிற்கு சந்திக்கவரும் உறவினர்களை பார்க்க அழைத்து செல்லப்பட்டார்.
சமீபத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டியூப் வழியாக உணவு கொடுக்கப்பட்டிருந்தது. குழாய் மற்றும் வடிகட்டிகள் பொருத்தப்பட்டு சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் 2 பேருடைய உதவி இல்லாமால் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலையில் இருந்தார். ஒவ்வொருநாளும் வாந்தி எடுத்துவந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த துன்பம் நிறைந்த வாழ்க்கையை முற்றிலுமாக வெறுத்த ஜேசன், "இந்த நிலைமையில் இதற்கும் மேல் வாழமுடியாது" என முடிவெடுத்தார். வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த அவர், நேற்று வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
வீட்டில் ஒரு இரவை மட்டும் கடந்துவிட்ட இன்று காலை தனது குடும்பத்தினர் முன்னிலையில் உயிரிழந்தார். அவர் இறக்கும் நேரத்தில் அவரைச் சுற்றி, அவரது மனைவி Sue Kelk (63), தாய், தந்தை, சகோதரி, 5 ஸ்டேப் குழந்தைகள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் இருந்தனர்.
பிரித்தானியாவில் மிகவும் துன்பப்படும் நோயாளி என்று கருதப்பட்ட ஜேசனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.