பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் இலங்கைக்கு தப்ப முயற்சி! கைது செய்த பொலிசார்: சிக்கினார் மிகப் பெரிய மாஸ்டர் மைண்ட்
பிரித்தானியாவைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின், தூத்துக்குடியில் இருக்கும் கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் சுற்றித் திரிவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அங்கிருக்கும் திரேஸ்புரம் அருகே முத்தரையர் காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கினர்.
அப்போது அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு நபர் செல்வதைக் கண்ட பொலிசார், சந்தேகமடைந்து, அவரை மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அவர் பிரித்தானியாவில் உள்ள லிட்டில்ஹாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பதும் அவரிடம் இருந்து பிரித்தானியா மற்றும் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்கள், 2 ஐபோன்கள், இலங்கை மதிப்பில் 2 லட்சம் ரூபாய் பணம், 2 ஆயிரம் ஐக்கிய அரபு நாடுகளின் திர்ஹம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஜோனாதன் தோர்ன் இந்தியாவில் வசிப்பதற்காக ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா என்ற கார்டை பெற கோவாவில் மணிப்பூரை சேர்ந்த யாங்கரேலா வாஷூம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை, பரோடா மற்றும் கோவா போதை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக இந்திய தொழிலதிபர் உள்ளிட்ட 12 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களில் ஜோனாதன் தோர்ன் மற்றும் ஜான்பிரேஸ்கன், வியட்நாமை சேர்ந்த நஜிமன் கோங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் கடந்த 2019 ஆகஸ்ட் வரை இவர் மும்பை சிறையில் இருந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து பரோலில் வெளிவந்த, இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு, போதை பொருட்களை கைமாற்றி விடுவதில் கில்லாடியாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் பெங்களூரு சென்றுள்ள அவர்,, அங்கிருந்து கார் மூலம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதன் பின், அவர் தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருந்த நேரத்தில் தான் பொலிச்சாரிடம் சிக்கியுள்ளார். பொலிசார் இவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.