தனியாகச் சென்ற பெண்ணிடம் குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபர்! பிரித்தானிய பொலிஸ் வலைவீச்சு
பிரித்தானியாவில் பிரதான சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவரது குழந்தையை விலைக்கு கேட்ட மர்ம நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் Dudley நகரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் Brierley Hill பகுதியில் உள்ள ஒரு சாலையில், ஒரு பெண் தனது குழந்தையை Pram வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து குழந்தையை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக கேட்டுள்ளார். பின்னர் குழ்நதையையும் தூக்கிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
அப்போது அந்த பெண், அந்த மர்ம நபரை தள்ளிவிட்டு, குழந்தையுடன் தள்ளுவண்டியை திருப்பிக்கொண்டு வேகமாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
பின்னர் நடந்தவற்றை பொலிஸில் கூறி புகார் அளித்துள்ளார். சம்பவத்தின்போது குழந்தையோ, தாயோ அந்த மர்ம நபரால் தாக்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.
குறித்த மர்ம நபரை அடையாளம் கண்டுபிடிக்க வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் வேறெங்கும் நடந்ததாக தகவல் உள்ளதா அல்லது வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
மேலும், Dudley சம்பவம் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியைச் சுற்றி ரோந்து பணியில் கூடுதலாக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.