ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரித்தானியா!
பிரித்தானியா பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை விதிக்குமாறு அழைப்பு விடுத்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு பிரித்தானியா சுற்றுச்சூழல் செயலாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்டா மாறுபாட்டின் பரவலை குறைக்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியா பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை அமுல்படுத்த வேண்டும் என்று ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஜேர்மன் அதிபரின் கருத்துக்களை விமர்சித்த பிரித்தானியா சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, இவ்வாறு அழைப்பு விடுப்பது நியாயமற்றது என கூறினார்.
ஒவ்வொரு நாடும் இது குறித்து தங்கள் சொந்த முடிவுகளை எடுத்து வருகிறது, எனவே அவர்கள் என்ன அணுகுமுறையை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
தடுப்பூசி அடிப்படையில் தற்போது பிரித்தானியா மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது, 80% பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர், 60% இரண்டு டோஸ் போட்டுள்ளனர்.
பிரித்தானியா மிகவும் முன்னேறி வரும் நிலையில், அனைத்து பயணிகளுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் அமுல்படுத்த வேண்டும் என அழைப்பு விடுப்பது எப்படி நியாயமானது என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் உண்மையில் இது குறித்து ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீர்மானிப்பது தான் நியாயமானது என George Eustice கூறினார்.
அதேசமயம், பிரித்தானியா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஜேர்மனி தடை விதித்துள்ளது.
ஜேர்மன் குடிமகன், குடியிருப்பாளர் அல்லது அவர்களின் மனைவி அல்லது குழந்தை, குடும்ப மரணம் போன்ற விதிவிலக்கான சூழ்நிலை இருந்தால் மட்டுமே பயணிகள் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பித்தக்கது.