பிரித்தானியாவில் மூன்று மடங்காக அதிகரித்த monkeypox தொற்றாளர்கள்: ஒரே நாளில் 36 பேர்களுக்கு உறுதி
பிரித்தானியாவில் monkeypox தொற்று வேகமெடுப்பதாக தகவல் வெளியான நிலையில், ஒரே நாளில் 36 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் மொத்தம் monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 என அதிகரித்துள்ளது. லண்டன் மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்று monkeypox தொற்றால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், monkeypox தொற்று காரணமாக இதுவரை எவரும் இறக்கவில்லை என்றே மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும். இது ஓரினச்சேர்க்கை மற்றும் இருபாலின ஈர்ப்பு ஆண்களை அதிகமாக பாதிப்பதாக சுகாதார நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கவலையளிப்பதாக இருந்தாலும் பிரித்தானிய மக்களில் ஆபத்து சதவீதம் குறைவாகவே உள்ளது என நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் தாமாகவே முன்வந்து சோதனை செய்து கொள்வதும் பாராட்டுக்குரிய விடயம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. monkeypox பரவல் தொடர்பில் கவனம் தேவை என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டாலும், கொரோனா போன்று பயண கட்டுப்பாடுகள், அவசர ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவை தற்போது தேவை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான மருத்துவமனைகளில் 1,000 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் கட்டாயம் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
monkeypox தொற்றானது பொதுவாக மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது, மேலும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவாது. அதனால்தான் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தொற்றானது சுகாதார நிபுணர்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் பதினாறு நாடுகளில் monkeypox தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.