பிரித்தானியாவில் Omicron பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூரவமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் இந்த Omicron எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இப்போது, ஸ்காட்லாந்தில் மொத்தம் 9 பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், இங்கிலாந்தில் மொத்தம் 5 பேருக்கு Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் சுகாதார செயலாளர் ஹம்சா யூசப் (Humza Yousaf) இன்று காலை, லனார்க்ஷயர் பகுதியில் 5 பாதிப்புகளும், NHS கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் க்ளைடில் 4 பாதிப்புகளும் உள்ளன என்று அறிவித்தார்.
அதேபோல், இங்கிலாந்தில் இதுவரை லண்டனில் மூன்று பேரும், எசெக்ஸ் மற்றும் நாட்டிங்ஹாமில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகளில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை அறிவிக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பால் (WHO) "கவலைக்குரிய மாறுபாடு" என வகைப்படுத்தப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதா அல்லது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பதைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் பணியாற்றிவருகின்றனர்.
இதற்கிடையில், தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் முதன்முதலாய் கண்டறியப்பட்ட இந்த Omicron மாறுபாடு, இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய Delta வகை கொரோனா வைரஸை விட ஆபத்தானது என கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த Omicron மாறுபாடு 44 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.
வெறும் 18 முறை உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸே உலகளவில் இன்னொரு கோவிட்-19 அலையை உருவாக்கிய நிலையில், இந்த Omicron வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருக்கின்றன.