பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் சோதனை முயற்சியை தொடங்கிய NHS!
பிரித்தானியாவில், அறிகுறிகள் தோன்றும் முன் 50 வகையான புற்றுநோயை கண்டறியக்கூடிய எளிய இரத்த பரிசோதனைக்கான சோதனைகளை NHS தொடங்கியுள்ளது.
'கேலரி' (Galleri) என்ற எளிய இரத்த பரிசோதனையின் மூலம் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதுவும், எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு முன்பே, போதுமான அளவிற்கு துல்லியமாக கண்டறியமுடியும் என்றும், இதனை பல புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது மார்பக, கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கான பிற தற்போதைய ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கு துணைபுரிகிறது.
அமெரிக்காவில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட புற்றுநோயின் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இந்த எளிய இரத்த பரிசோதனைக்கான சோதனைகளை NHS தொடங்கியுள்ளது. இதற்காக, நாட்டில் எட்டு பகுதிகளில் 140,000 தன்னார்வலர்களைச் சேர்க்கும் பணியில் NHS இங்கிலாந்து ஈடுபட்டுள்ளது.
50 முதல் 77 வயதுக்குட்பட்ட பல்வேறு பின்னணியிலிருந்தும் இனத்தவர்களிடமும் பங்கேற்குமாறு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
மிகவும் ஆபத்தான பல புற்று நோய்களை ஆரம்பகாலத்தில் கண்டறிவதால், இந்த 'கேலரி' இரத்த பரிசோதனையின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
என்ஹெச்எஸ் தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் (Amanda Pritchard) இதுகுறித்து கூறுகையில்: 'இந்த விரைவான மற்றும் எளிமையான இரத்தப் பரிசோதனை உலகில், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் ஒரு புரட்சியின் தொடக்கமாக அமையலாம்.
அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம், அதற்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது, மேலும் மக்களுக்கு உயிர்வாழ சிறந்த வாய்ப்பை வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.