பிரபல பிரித்தானிய நடிகர் மீது 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!
பிரித்தானிய தேசிய விருதைப் பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக வலம் வருபவர் Noel Clarke.
45 வயதாகும் நோயல் கிளார்க் கிட்டத்தட்ட 30 படங்களில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு நிறைந்த நடிகருக்கான பிரித்தானியாவின் தேசிய விருத்தப் பெற்ற நோயல், பாஃப்டா, லாரன்ஸ் ஒலிவியர் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான அந்தஸ்தில் உள்ள இவர் மீது, தற்போது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக 'தி கார்டியன்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும், நோயல் தங்களை பாலியல் துன்புறுத்தல், தேவையற்ற தொடுதல் உள்ளிட்ட பல வகையில் பாலியல் ரீதியாக முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், நோயல் தன் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார். இது குறித்து கிளார்க் ஒரு அறிக்கையில் கூறியதாவது: “20 ஆண்டுகால வாழ்க்கையில், நான் எனது வேலையில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை முன்னணியில் வைத்திருக்கிறேன், எனக்கு எதிராக ஒருபோதும் புகார் கொடுக்கப்படவில்லை.
என்னுடன் பணிபுரிந்த எவருக்கும் எப்போதாவது அசவுகரியம் அல்லது அவமரியாதை ஏற்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன். எந்தவொரு பாலியல் முறைகேடு அல்லது தவறான செயல்களையும் நான் கடுமையாக மறுக்கிறேன், இந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக என்னை தற்காத்துக் கொள்ள விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
இந்நிலையில், நோயல் கிளார்க்கிடமிருந்து சிறந்த பங்களிப்பு விருது மற்றும் உறுப்பினர் அட்டையை பாஃப்டா இடைநிறுத்தியுள்ளது.
தற்போது நோயல் கிளார்க் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.