பிரித்தானியா பிரதமர் குறித்து அவரின் முன்னாள் முக்கிய ஆலோசகர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! சிக்கிய போரிஸ் ஜான்சன்?
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் ஸ்டீரிட் குடியிருப்பை புதுப்பிக்க எப்படி நிதியளித்தார் என்பது குறித்து விசாரணை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
போரிஸ் ஜான்சனின் முக்கிய ஆலோசகராக இருந்து டோமினிக் கம்மிங்ஸ், கடந்த ஆண்டு அப்பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை டோமினிக் கம்மிங்ஸ் பிளாக்கில் கூறியதாவது, பிரதமர் குடியிருப்பை புதுப்பிக்க நன்கொடையாளர்களின் பணத்தை செலவு செய்வதற்கான அவரது திட்டங்கள் நெறிமுறையற்றவை, முட்டாள்தனமானவை, சட்டவிரோதமானவை என தான் போரிஸிடமே சொன்னதாக கம்மிங்ஸ் கூறினார்.
புதுப்பித்தலுக்கு ஆன செலவு குறித்து விவரங்கள் மற்றும் கொரோனா வென்டிலேட்டர்கள் குறித்த போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட உரையாடல்கள் கசிந்ததற்கு தான் பொறுப்பல்ல என கூறினார்.
மேலும், பிரதமரும் அவரது அலுவலகமும் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை இழந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, சட்டப்படி தான் பிரதமர் குடியிருப்பு புதுப்பிக்கப்பட்டதாவும், அதுகுறித்து தகவல் கசிந்தது தொடர்பான விசாரணையில் பிரதமர் தலையிடவில்லை என போரிஸ் அலுவலகம் தரப்பில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், டோமினிக் கம்மிங்ஸ் கூற்றை முன்வைத்து பிரதமர் குடியிருப்பு புதுப்பித்தலுக்கு நிதியளிக்கப்பட்டது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானியா எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தொழிலாளர் கட்சி முழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது. இது முக்கியமானது, ஏனெனில் இது நேர்மை பற்றியது, இது வரி செலுத்துபவர்களின் பணத்தைப் பற்றியது என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் Keir Starmer தெரிவித்தார்.