அமெரிக்க விசா விதிகளை மீறியதால் சிக்கலில் பிரித்தானிய பெண்! ட்ரம்பால் கதறும் பெற்றோர்
பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அமெரிக்க விசா விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவரது பெற்றோர் கண்ணீருடன் அச்சத்தில் உள்ளனர்.
குடியேற்றத் தடுப்பு நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கையாக விசா முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதன்படி, நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், பிரித்தானியாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணொருவர் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சிக்கலில் உள்ளார்.
ரெபெக்கா பர்க் என்ற பிரித்தானியப் பெண், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு தனியாக சுற்றுலாப் பயணியாக வந்தார்.
அவர், கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி கனேடிய எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டனின் டகோமாவில் உள்ள மையத்தில் இரண்டு வாரங்கள் அடைத்து வைக்கப்பட்ட ரெபெக்கா, ஒரு மாதம் வரை அங்கேயே செலவிட நேரிடும் என அவரது பெற்றோர் தற்போது அஞ்சுகின்றனர்.
மகளின் விடுதலைக்காக
ரெபெக்காவின் தந்தை பால் பர்க் (60), தாய் ஆண்ட்ரியா இருவரும் தங்கள் மகளின் விடுதலைக்காக மன்றாடுகின்றனர். தினசரி தொலைபேசியில் அவருடன் பேசும்போது வருத்தத்தில் இருப்பதை உணர்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பால் பர்க் கூறுகையில், "நீங்கள் அவளை முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்போகிறீர்கள் என்றால், நாளை அவள் ஏன் விமானத்தில் ஏறக்கூடாது? வீட்டிற்கு செல்ல விரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணியாக இருந்தபோதும், அவள் ஒரு சட்டவிரோத வெளிநாட்டவராக வகைப்படுத்தப்பட்டுள்ளார். அவள் அங்கே தங்க விரும்பவில்லை" என்றார்.
ஒரு காகித வேலை குழப்பம்
அத்துடன் "முன்னுரிமை பட்டியலில் தான் முன்னேறி வருவதாக ICE அதிகாரி கூறியதில் அவள் சற்று நிம்மதியடைந்தது போல் இருந்தது. இந்த பயங்கரமான சூழ்நிலையில் அவள் சிக்கியிருப்பதால் விடுதலையானது போல், கிட்டத்தட்ட மகிழ்ச்சியான கண்ணீர் இருந்தது. நாங்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.
இது ஒரு காகித வேலை குழப்பம். அவள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமைகளை எங்களால் நம்ப முடியவில்லை. இது ஒரு சிறை சூழல். ஆரம்பத்தில் அவள் ஒரு இளம் பெண்ணாக தனியாக பயணம் செய்கிறாள் என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்.
ஆனால் அவள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சென்றதாக எங்களிடம் கூறியபோது, ஒரு பிரித்தானிய நபர் தனியாக பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இரண்டு நாடுகள் என்று நாங்கள் நினைத்தோம்" என தெரிவித்தார்.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) ரெபெக்கா நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவிற்கான புதிய பிரித்தானிய தூதர் பீட்டர் மண்டேல்சன் உதவியால் அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என்று பால் பர்க் நம்புகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |