இது இனப்படுகொலை! பிரித்தானியா நாடாளுமன்றம் முக்கிய அறிவிப்பு
சீனாவின் சின்ஜியாங்கில் அரங்கேறுவது இனப்படுகொலை என அறிவித்த பிரித்தானியா நாடாளுமன்றம், இதை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம் மக்கள் மனிதகுலத்திற்கு எதிரான மற்றும் இனப்படுகொலை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இதை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்துமாறு பிரித்தானியா அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்து கன்சர்வேடிவ் எம்.பி நுஸ்ரத் கானி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை எம்.பி-க்கள் ஆதரித்தனர்.
எம்.பி-க்கள் ஆதரவு இருந்தாலும் இதில் முடிவெடுக்க சட்டப்படி நாடாளுமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதாவது, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பிரித்தானியா அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், இனப்படுகொலை என்று அறிவிப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் நீதிமன்றங்கள் தான் எடுக்கும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்க அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சின்ஜியாங்கில் விவகாரம் தொடர்பில் தற்போது வரை சில சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ள பிரித்தானியா அரசு, அங்கிருந்து வரும் பொருட்கள் பிரித்தானியாவில் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் வதிகளை அறிமுகப்படுத்தியது.
ஆனால், சீனா மீது பிரித்தானிய அமைச்சர்கள் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி-க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கையை பிரித்தானியாவுக்கான சீனத் தூதரகம் கண்டித்துள்ளது.
மேலும் சீனாவின் முக்கிய நலன்களை மதிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுத்ததுடன், உடனடியாக அதன் தவறான நடவடிக்கைகளை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.