பிரித்தானியா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்ட தமிழ்நாட்டு நபர் - என்ன காரணம்?
கோயம்புத்தூரை சேர்ந்த ஜி.டி. விஷ்ணு ராம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் கௌரவம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த ஜி.டி. விஷ்ணு ராம், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரும் சைக்கிள் ஓட்டுநரும் ஆவார்.
இவர் பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் சைக்கிள் மற்றும் கார் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, சமீபத்தில் கோயம்புத்தூரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 500 கிமீ தூரத்தை 15 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

கடந்த டிசம்பர் 6, 2025 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு தனுஷ்கோடியிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 7, 2025 அன்று காலை 6:38 மணிக்கு கோயம்புத்தூரைச் சென்றடையும் 504 கி.மீ. பயணத்தை, 15 மணி 8 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
இதனை சாதனையாக 'லண்டன் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' (London world book of Records) என்ற அமைப்பு அங்கீகரித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிரித்தானியா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) என்று அழைக்கப்படும் மக்களவையில் வைத்து இதற்கான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்ற இந்த ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில், தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற ஒரே நபர் ஜி.டி. விஷ்ணு ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய அவர், "சைக்கிள் பயணம் வாயிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
2026 ஆம் ஆண்டில் 2026 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து, போதைப்பொருள் இல்லாத தமிழகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை வீரியத்துடன் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக எங்களது பயணம் அமையும்" என தெரிவித்தார்.
ஜி.டி. விஷ்ணு ராமின் சாதனைகள்
இதே போல் சில மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 161 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, 4 மணி நேரம், 28 நிமிடங்கள், 19 வினாடிகளில் சேலத்தை அடைந்தார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின்படி, 'சாலை சைக்கிளிங்கில் 100 மைல்களை அதிவேகமாகக் கடந்த தனிநபர்' என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், 99 நகரங்களை 99 மணிநேரத்தில் காரில் கடக்கும் சாதனை முயற்சியில் சென்னை-கொல்கத்தா-டெல்லி-மும்பை-சென்னை இடையிலான 5950 கிலோமீட்டர் தூர கார் பயணத்தை அவர் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி, 82 மணிநேரத்தில் ஜூன் 6ஆம் தேதி நிறைவு செய்தார்.

மேலும், பெண் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணருவு ஏற்படுத்த இந்தியாவின் 4 முனைகளையும் காரில் 10 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |