பிரித்தானியாவில் பாடசாலைகளின் நிதியை முடக்கிய மின் கட்டணம்..சிறார்களுக்கு கொண்டு வரப்படும் புதிய நடைமுறை
பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணங்கள் பாடசாலை நிதியை முடக்குவதால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் வகுப்பறைகளில் கோட் அணிய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு
பிரித்தானியாவில் அதிகரித்திருக்கும் மின் கட்டணம் ஆங்கிலப் பள்ளிகளின் நிதிநிலையை முடக்கியுள்ளது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான குழந்தைகள் வகுப்பறைகளில் கோட் அணிய வேண்டியிருக்கும் என கல்வி அறக்கட்டளையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் செலவுகளைக் குறைக்க அனைத்து அறக்கட்டளையின் கட்டிடங்களிலும் LED விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் கட்டணங்கள் இன்னும் அதிகரித்து வருவதாகவும் Vale அகாடமி அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ரிச்சர்டு எவன்ஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் செலவினங்கள்
மேலும் அவர் கூறும்போது, தங்களிடம் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் அதிக ஊழியர்களை நியமிக்க செலவுகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், பல தலைமை ஆசிரியர்கள் கற்பித்தல் மற்றும் துணைப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வகுப்புகளின் அளவுகளை அதிகரித்து பணத்தை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வித்துறையானது இந்த நிதியாண்டில் 53.8 பில்லியன் பவுண்ட்கள் நிதியில், 4 பில்லியன் பவுண்ட்கள் ரொக்க ஊக்கத்தை உள்ளடக்கியுள்ளதாகவும், இது ஒரு மாணவருக்கு 7 சதவீதம் என அதிகரித்துள்ளதாகவும் கூறியது.