மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம்
மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின்.
மே மாதம் 19ஆம் திகதி, வானொலியில் வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு
அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாக, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.

குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் ஒரு முறை மன்னர் சார்லஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட, 16 நிமிடங்களுக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியுள்ளது.
இந்நிலையில், அரை மணி நேரத்துக்குப் பின், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட வானொலி அறிவிப்பாளர், மன்னர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடந்தது என்ன?
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
வானொலி நிலையத்தில் கணினி பராமரிப்புப் பணிக்காக வந்த ஒரு பணியாளர், கணினியில் மன்னர் மரணம் தொடர்புடைய மூன்று கோப்புகள் இருப்பதைக் கவனித்துள்ளார்.
அதில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில், அந்த கோப்புகளை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த பணியாளர்.
விடயம் என்னவென்றால், அப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சி, வேறொரு இடத்திலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது, தொலைபேசியில் வாசகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், வானொலி நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, பாடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மன்னர் குறித்து வந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளார்.

இதற்கிடையில், அந்த பராமரிப்புப் பணியாளர் தான் தவறு செய்துவிட்டது தெரியவந்ததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
நிகழ்ச்சியை வழங்குபவர் வானொலி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலைய பொறியாளரிடம் விசாரிக்க, அவர் அந்த பராமரிப்புப் பணியாளர் செய்த தவறு குறித்து கூறியுள்ளார்.
தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், வாசகர்களிடம் மன்னர் குறித்து வெளியான தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்கிறது.
ஒழுங்குமுறை அமைப்புக்கு வந்த புகார்கள்
இந்நிலையில், வானொலி, தொலைக்காட்சி முதலான தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் ஒழுங்குமுறை அமைப்பான Ofcom என்னும் அமைப்புக்கு இந்த தவறு தொடர்பில் புகார்கள் வர, அந்த அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
விசாரணையின் முடிவுகள், ரேடியோ கரோலின் வானொலி, இரண்டு விதி மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.
துல்லியமான, பாரபட்சமற்ற தகவல்களை வெளியிடுதல் மற்றும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக அதை திருத்திக்கொண்டு அது குறித்து விளக்கமளித்தல் என இரண்டு விதிகளை ரேடியோ கரோலின் வானொலி மீறியுள்ளதாக Ofcom தெரிவித்துள்ளது.
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
தவறு செய்த பராமரிப்புப் பணியாளர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாக வானொலி நிலையம் தெரிவித்துள்ளதுடன், அவர் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னர் மரணம் தொடர்பான கோப்புகள், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கணினியிலிருந்து அகற்றப்பட்டு, தனியாக ஒரு ஹார்ட் ட்ரைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கோப்புகளை பயன்படுத்துதல் தொடர்பில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |