பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்?
UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கடத்திய விடயம் கொலையில் முடிந்துள்ளது.
பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர் ஒருவர், கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை கடத்திய இளைஞர்
பெங்களூருவைச் சேர்ந்த வாலா பாஸ்கர் ரெட்டி (28) என்னும் இளைஞர், சமீபத்தில்தான் பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்து இந்தியா திரும்பியுள்ளார்.

இந்நிலையில், ரெட்டியும், பள்ளி ஒன்றில் பேருந்து கிளீனராக வேலை செய்யும் ஏடுகொண்டலு என்னும் நபரும் சேர்ந்து, சிறுவன் ஒருவனை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, முன்பு ரெட்டி வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ப்ரஜ்வால் என்னும் எட்டாம் வகுப்பு சிறுவனை, பட்டாசு வாங்கித் தருவதாகவும், தனது காரை ஓட்ட அனுமதிப்பதாகவும் கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் இருவரும்.
வழியில் ஓரிடத்தில் அந்த சிறுவனை ஒரு கட்டிடத்தில் அடைத்துவைத்து, அவனை பேசவைத்து, வீடியோ ஒன்றை எடுத்து, அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இருவரும்.
அப்போது, அந்தச் சிறுவனை இரண்டு முறை அவர்கள் தாக்கியுள்ளார்கள். இரண்டாவது முறை தாக்கும்போது அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளான்.
பயந்துபோன, ஏடுகொண்டலு ஓட்டம் பிடிக்க, சிறுவனின் உடலை காரின் பின்பக்கத்தில் அடைத்து, காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார் ரெட்டி.
ஆனால், பதற்றத்தில் அவரது கார் இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மின் கம்பம் ஒன்றிலும், பின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும் ரெட்டியின் கார் மோத, அங்கிருந்தவர்கள் ரெட்டியை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
அவரது காரை சோதனையிடும்போது, காரின் பின் பக்கத்தில் சிறுவன் ஒருவன் உடல் இருக்கவே, உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ரெட்டியைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஏடுகொண்டலுவையும் தேடி வருகிறார்கள்.
ரெட்டிக்கும் அவர் கடத்திய சிறுவன் குடும்பத்துக்கும் பகை எதுவும் இல்லை என்பது உறுதியான நிலையில், எதனால் அவர் அந்தச் சிறுவனை கடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்நிலையில், ரெட்டி பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்றதில், அவரது தந்தைக்கு மூன்று கோடி ரூபாய் கடன் ஆகிவிட்டதால், அந்தக் கடனை அடைக்க, அந்தச் சிறுவனைக் கடத்தி அவனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ரெட்டி திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.