இனிமேல் புலம்பெயர்ந்தோருக்கு இது தான் கதி! கசிந்த பிரித்தானியாவின் புதிய திட்டம்: ஆபத்தானது என எச்சரிக்கும் பிரான்ஸ்
பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ஏற்றி வரும் படகுகளை அப்படியே திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தால், இங்கிலீஷ் சேனலை சிறிய படகுகளில் கடக்க முயற்சிப்பதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மக்களின் எழுச்சியை எவ்வாறு கையாள்வது தொடர்பில் பிரித்தானியா-பிரான்ஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
பிரித்தானிய எல்லை அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ஏற்றி வரும் படகுகளை அதன் கடல் எல்லையிலிருந்து திருப்பி அனுப்ப பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால் பாதுகாப்பானதாகக் கருதும்போது மட்டுமே இந்த புதிய உத்தி பயன்படுத்தப்படும் என பெயர் குறிப்பிடாத பிரித்தானியா அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரல் மைக்கேல் எல்லிஸ், புதிய உத்தியைப் பயன்படுத்த எல்லை அதிகாரிகளுக்கு தகுந்த சட்டங்களை உருவாக்குவார் என்று அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து உள்நாட்டு ஊடகங்களுக்கு கசிந்த ஒரு கடிதத்தில், பிரான்சின் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, படகுகளை மீண்டும் கட்டாயப்படுத்தி பிரான்ஸ் கடற்கரை நோக்கி திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறினார்.
தேசியம், அந்தஸ்து மற்றும் புலம்பெயர்ந்த கொள்கை ஆகியவற்றைக் காட்டிலும் கடலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரித்தானியாவின் திட்டத்திற்கு Gerald Darmanin எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றான இங்கிலீஷ் சேனலில், இந்த ஆண்டு இதுவரை நூற்றுக்கணக்கான சிறிய படகுகள் பிரான்சில் இருந்து பிரத்தானியாவுக்கு பயணம் செய்ய முயற்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.