இந்தியாவுக்கு 3 'ஆக்சிஜன் தொழிற்சாலை'களை அனுப்பும் பிரித்தானியா!
நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான ஆக்சிஜன் எந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரித்தனியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு அதன் நட்பு நாடான இந்தியாவுக்கு முதற்கட்டமாக இந்த வாரத்துக்கு 3 பிரம்மாண்டமான ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை அனுப்புகிறது.
Oxygen Factory' என்று அழைக்கப்படும் இந்த எந்திரம் ஒவ்வொன்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கண்டெயினர்கள் அளவிற்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு 'Oxygen Factory' எந்திரமும் நிமிடத்துக்கு 500 லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்றும் பிரித்தானிய அரசு கூறியுள்ளது.
முன்னதாக பிரித்தானியா, இந்தியாவுக்கு அனுப்பும் அளவிற்கு தங்களிடம் உபரி தடுப்பூசிகள் இல்லை என்று கைவிரித்தது. ஆனால், முதற்கட்டமாக இந்த வாரத்துக்குள் 495 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் 200 வென்டிலேட்டர்களையும் இந்தியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவை எப்போது இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவுகளையும் தொடர்ந்து கொடுப்பதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.