பிரித்தானியார்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது! கொரோனா குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கிவிட்டதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது 53 நாடுகள் பரவி அங்கிருக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்த வைரஸ், B.1.617.1, B.1.617.2, மற்றும் B.1.617.3 என மூன்று பிரிவுகளாக உள்ளது.
இதில், B.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், B.1.617.2 வகை வைரஸ் 54 நாடுகளிலும், B.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று, தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், தற்போது பரவி வருவது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் என எச்சரித்துள்ளனர். இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரித்தானியாவில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அரசும் இதை கவனமாக கையாள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் கூறுகையில், டெல்டா கொரோனா வைரஸ் இப்போது பிரித்தானியாவில் பரவ துவங்கியுள்ளதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. மேலும், கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக் கொண்டால், பெரும்பாலான மக்களின் நலனைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.