12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு எந்த கொரோனா தடுப்பூசி போடலாம்? பிரித்தானியா மருத்துவக் குழு பரிந்துரை
பிரித்தானியாவில் இருக்கும் மருத்துவ குழு 12 முதல் 15 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி போடலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரித்தானியா அவசரகால தேவையாக தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. அதன் படி முதலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நபர்கள், மருத்துவ ஊழியர்கள் என அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனால் பிரித்தானியாவில் இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? அப்படி தடுப்பூசி போடலாம் என்றால் எந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்பின் தலைவர் மார்கோ சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை.
இதனால் பைஸர் தடுப்பூசியை 12 முதல் 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம் என்று கூறியிருந்தார். ஜேர்மனியில் 12 வயதுக்கு அதிகமான சிறுவர், சிறுமிகளுக்கு வரும் ஜூன் 7-ஆம் திகதி பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கடந்த மாதம் அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பைஸர் நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது.
அதேபோல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியா மருத்துவக் குழு, பதின் பருவத்தினருக்கு பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்துள்ளதால், பிரித்தானியா தடுப்பூசிக் குழு, இந்தப் பரிந்துரை குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.