ஆக்ஸிஜன் பற்றாக்குறை... கொத்து கொத்தாய் மரணம்: பேரழிவில் ஸ்தம்பித்த இந்தியாவுக்கு பிரித்தானியாவின் உதவிக்கரம்
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பேரழிவை எதிர்கொண்டு வரும் இந்தியாவுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்ப இங்கிலாந்து அரசு முன்வந்துள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோரதாண்டவமாடுகிறது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் சிகிச்சை பலனின்றி இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செயற்கை சுவாசக்கருவிகள், ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான கருவிகள் உட்பட 600 எண்ணிக்கையிலான கருவிகளை முதற்கட்டமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
தேவைக்கு அதிகமான கையிருப்பு இருப்பதால், இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரதமர் போரிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் அனைத்தும் அடுத்த வார துவக்கத்தில் டெல்லியை சென்றடையும் என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யாரை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் மிக மோசமான நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிக மோசமாக சூழலை நாட்டின் அனைத்து மாநில மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 349,691 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது.
இதனால் அடுத்த மாதத்தில் மட்டும் நாளுக்கு 5,700 பேர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மக்கள் உதவி கேட்டு கதறுவதும், அரசு முன்னெடுத்து செய்ய வேண்டிய பணியை பொதுமக்களே தாமாக முன்வந்து செய்வதும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் அதிக எண்ணிக்கையால் மருத்துவ ஊழியர்களால் கவனிக்க முடியாமல் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தில் இருந்து 9 விமானங்களில் மருத்துவ உதவிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இந்தியாவை சென்றடையும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவின் இந்த இக்கட்டான நிலையில் உதவ முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தற்போதைய மிக மோசமான சூழலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என பரவலாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சுகாதார அமைப்புகளை மேம்படுத்தாமல் பெரிய மத மற்றும் அரசியல் கூட்டங்கள் நடைபெற அனுமதிப்பதன் மூலம், நரேந்திர மோடியின் அரசாங்கம் பேரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.