இன்று முதல்... புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரித்தானியா துவக்க இருக்கும் கடும் நடவடிக்கை
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள், இன்று முதல் சில குறிப்பிட்ட கடும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
பிரித்தானியா துவக்க இருக்கும் கடும் நடவடிக்கைகள்
சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள், இங்கிலாந்திலுள்ள Manston என்னுமிடத்தில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கை பரிசீலனை மையம் ஒன்றிற்கு அனுப்பப்படுவார்கள்.

இந்நிலையில், இன்று முதல், அந்த புலம்பெயர்ந்தோரின் ஓவர் கோட், ஜாக்கெட் அல்லது கையுறைகளை அகற்றி, அவர்கள் மின்னணு கருவிகள் எதையாவது மறைத்துவைத்துள்ளார்களா என பரிசோதிக்க இருக்கிறார்கள் பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகள்.
அத்துடன், புலம்பெயர்ந்தோரை வாயைத் திறக்கச் செய்து, அவர்கள் வாய்க்குள் சிம் கார்டு போன்ற எதையாவது மறைத்துவைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவும் இருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஆட்கடத்தல்காரர்கள் குறித்த ஏதாவது தகவல்கள் இந்த புலம்பெயர்வோரின் மொபைல்களில் இருக்கும்பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படவும் உள்ளன.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

Freedom from Torture என்னும் அமைப்பின் இணை இயக்குநரான Natasha Tsangarides என்பவர், ஏற்கனவே ஆபத்தான கடல் பயணத்தால் மிரண்டுபோயிருக்கும் புலம்பெயர்ந்தோரின் உடைகள் மற்றும் வாய்க்குள் எல்லாம் சோதனை செய்து மோசமாக நடத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என விமர்சித்துள்ளார்.
அதேபோல, Wilson Solicitors என்னும் அமைப்பைச் சேர்ந்த Jonah Mendelsohn என்பவரும், பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டவையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |