பிரித்தானியா வெளியிட்ட 12 நாடுகள் கொண்ட 'Green List Countries'
பிரித்தானியர்கள் மிகவும் எதிர்பார்த்த Green List Countries அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய Green List Countries அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் அடைப்படையில் உலக நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று புதிய பட்டியல்களை பிரித்தானிய அரசு தயார் செய்துள்ளது. அதன் அடிப்படையில், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.
இதில் Green List உள்ள நாடுகளுக்கு பயணிக்க எந்த வித கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்படாது.Green Listல் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, ஆனால் வருகைக்குப் பின் ஒரு PCR சோதனை மட்டும் எடுக்க வேண்டும்.
மஞ்சள் பட்டியல் நாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் குறைந்தது 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தி, 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.
அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்பவர்கள் நாடு திரும்பும் போது, தலா 1,750 பவுண்ட் சொந்த செலவில் அரசு அங்கீகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வேண்டும். இதற்கிடையில் 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் தற்போது 12 நாடுகளைக் கொண்ட Green Listயை வெளியிட்டுள்ளது. அதில் போர்ச்சுகல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அசோர்ஸ் மற்றும் மடிரா தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், புருனே, ஐஸ்லாந்து, ஃபாரோ தீவுகள், ஜிப்ரால்டர், பால்க்லேண்ட் தீவுகள்,தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள், இஸ்ரேல், செயிண்ட் ஹெலினா மற்றும் அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா ஆகியவை அடங்கும்.
இந்த நாடுகளுக்கு பிரித்தானியர்கள் வரும் 17-ஆம் திகதி முதல் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலில் உள்ள இந்த நாடுகளில், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பிரித்தானிய பார்வையாளர்களை நாட்டில் அனுமதிப்பதில்லை. இதனால், பிரித்தானியர்கள் மற்ற இடங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பட்டியலை வெளியிட்ட போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "இந்த பட்டியல் நாடுகள் ஒரு கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படும். எங்களுக்கு ஏதேனும் கவலைகள் ஏற்படத் தொடங்கினால், புதிய தொற்று எண்ணிக்கையில் உயர்வு இருந்தால் அல்லது புதிய உருமாறிய வைரஸ் பரவினால், நாங்கள் வேகமாக செயல்படவும், இந்த நிலையை திரும்பப் பெறவும் தயங்க மாட்டோம்" என கூறியுள்ளார்.